ரவிஉதயன்
Monday, May 30, 2011
வாசிக்க சேதிகள்
புத்தகங்களில்,
சுவற்றில்,
தரையில்,
குழந்தைகள் கிறுக்குவதில்
சேதிகள் நமக்குண்டு,
கிறுக்கர்களாய் மாறாமல்
அதை
வாசிக்க இயலாது.
Thursday, May 26, 2011
தரிசனம்
சிறு திரைவிலகலில்
காண நேர்ந்துவிடுகிறது.
தரிசிக்ககாத்துக்கிடந்த
முழுமுதற் கடவுளை
அரைகுறை ஒப்பனைகளுடன்.
Wednesday, May 25, 2011
பறவையும்,மீனும்
காற்றினுள் மிதக்கிறது
சட்டென
தாழப்பாய்ந்து நீரைக்கிழிக்கிறது
நீரினுள் மிதக்கிறது
சட்டென
மேலேபாய்ந்து
காற்றைக்கிழிக்கிறது.
Tuesday, May 24, 2011
பம்பரம்2
மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை
நடுநாக்கில் தொட்டெடுத்து
சொடுக்கிச் சுழற்ற
தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி.
சாட்டைக் கையிற்றில்
எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான்.
அட்சய ரேகையிலிருந்து
இடம் மாறி
சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது
சுழலும் பூமிப்பம்பரம்
Monday, May 23, 2011
பம்பரம்1
ஒருசுற்று மறுசுற்று
கழுத்திலிறுக்கிச் சுற்றுகிறான்
கயிற்றை சிறுவன்.
குளிர்பான மூடியோடு
கயிற்றின் நுனி
விரல் இடுக்கில் முடிகிறது.
விர்ரென்று...காற்றில்
கயிற்றைச்சொடுக்குகிறான்.
விடுபட்டுத்தரையில்
பல நூறுசுற்றுக்கள் சுற்றி
துடித்தடங்குகிறது
பம்பரத்தின் உடல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)