Tuesday, March 18, 2014

இரண்டு இனிய நண்பர்கள் ஈரோடு வந்திருந்தார்கள்.











ஒரு தொலைபேசி உரையாடலின் போது நண்பர்களோடு வருவேன் ரவி என்றார் பவா.பிறகொரு உரையாடலில் ஷைலஜாவும் வருகிறார்என்றார்.ஆச்சரியத்தோடு நண்பர்களோடு  தான் வருவேன் என்று சொன்னீர்களே பவா என்றேன்!?  ஷைலஜாவும் எனக்கு நல்ல நண்பர் என்றார் பவா.அப்படித்தான் அன்று அந்த இரண்டு இனிய நண்பர்கள் ஈரோடு வந்திருந்தார்கள்.

நீள் பயணம் கடும் வெய்யில்  ஈரோடு  வந்து சேர்ந்தவுடன்   பயணச் சோர்வு சிறு ஓய்வை வேண்டியிருக்கும்.மாலை 4 மணிக்கு விடுதி அறைக்கதவைத் தட்டியபோது அன்போடு எதிர் கொண்டார் பவா.
அப்பொழுது குளித்து முடித்து வந்திருந்த சைலஜா மேடத்தின்  குவித்த கரத்திலும்,குலுக்கிய கரத்திலும்  ஈரம் சொட்டியபடியே இருந்தது அவரின் அன்பைப் போலவே.முன்பு வராத தினத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.வண்ணதாசன்  அவர்களோடு ஒரு அற்புத தினமாக அந்த நாள் கழிந்திருக்கும் என்ற ஏக்கம் அவரது பேச்சில் தெரிந்தது.
 பிறகு சிறிது நேரத்தில் கல்லூரிக்கு புறப்பாடு. குன்று போல பவாவும் அதில் மினுங்கும் சுடர் போல ஷைலஜாவும்  இருந்தார்கள்.
கல்லூரித் தலைவர் பவா என்கிற பெயர்ச் சொல்லிற்கு அர்த்தம் வினவ?
முருக பெருமானின் சரவண பவ  என்ற மந்திரச்சொல்லில் இருக்கிற பவ என்கிற சொல் தான் அது.அம்மா தன்னை" பவா" என்றே அழைப்பார்கள் என்று பவா விளக்கினார்.
 பிறகு பிரமாண்ட மைதானத்தில் அமைத்திருக்கிற மேடை நோக்கி பயணம்.அது வரை அமைதியாய் இருந்த இடத்தில் மேளதாளம்  தாரை தப்பட்டையொலிக்க கல்லுரி மாணவர்கள் காலில்சலங்கை கட்டிக் கொண்டு  பவாவையும்,ஷைலஜாவையும் வரவேற்ற விதம் மெய்
சிலிர்க்க வைத்தது.

ஜெயமோகனின் கதை வரிகளில் இருந்து தொடங்கி ஜெயமோகனின்
சோற்றுக் கணக்கு என்கிற கேட்கிற எல்லோரையும் உலுக்கிற கதையோடு தன் உரையை முடித்தார் இடையே காமராஜர்,ராஜாஜி, மம்மூட்டி குறித்து எடுத்துக்காட்டுகள்  இருந்தன.பிசிர் தட்டாத பேச்சு பவாவினுடையது.

இரவு 9 மணி  அவசர அவசரமாக கல்லூரியில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள்.சாலையில் மறைந்து  கொண்டிருக்கிற கருப்பு நிற காரின் இரு பின் பக்க சிவப்பு விளக்குகள் கண்ணை விட்டு மறைகிற வரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.வானத்தில் அன்றுமுழு நிலா   அன்று பவுர்ணமி.ஆம் திருவண்ணாமலையிலிருந்து   இரண்டு பவுர்ணமிகள் ஈரோட்டிற்கு வந்து விட்டு போயிருந்ததன.  நன்றி பவா. நன்றி ஷைலஜா மேடம்.