Wednesday, June 30, 2010
பால பாடம்
துப்பாக்கியை. நெஞ்சக்கு நேர் நீட்ட
இரு கைகளையுயர்த்தினேன்
பொம்மைதுப்பாக்கியென்று
சிரித்தான் மகன்
தெரியுமென்றேன்
எப்படி என்றான்?
நிஜ துப்பாக்கிகள்
ஒருபோதும் சொல்லிக்கொண்டு
வெடித்துக்கொல்வதில்லை மகனே என்றேன்
கீற்று .காமில்வெளியான கவிதை
Wednesday, June 23, 2010
கழுவும் கைகள்
உங்களுக்கு உகுக்கவேண்டியக்கண்ணீர்த்துளிகள்
ஆவியாகிவிடுகின்றன
உங்கள் உரிமைக்கு உயர்த்தபடவேண்டிய கைகள்
ஒன்றையொன்று கழுவிக்கொள்கின்றன
உங்களை ஆற்றுப்படுத்தச்சொல்லவேண்டிய சொற்கள்
சிறுமூச்சாய் வெளியேறுகிறது
உங்களுக்குச்சிந்தப்படவேண்டிய சகோதரக்குருதி
உள்ளுக்குள் உறைந்துவிடுகிறது
இதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது
வீழ்ந்த எங்களின்நிழல்களின் பேரழிவை
செவிட்டூமையாகப் பிறந்து
தன் பார்வையையும் இழக்கத்தொடங்குகிறது
இந்தகவிதையும் எங்களைப்போல
keetru.com ல்வெளியானது
Wednesday, June 9, 2010
விட்டு விலகி
கத்தும் கன்றுகளைக்கடந்து
பசியபுல்வெளியைக் கடந்து
வைக்கோல் போர்களைக்கடந்து
அருந்திக் குளித்துமகிழ்ந்த
குளத்தைக்கடந்து
வீழ்ந்தமரத்தில்
தான்வாழந்த இடத்தை
வெறித்து நோக்குகிற
ஒரு பறவையைப்போல்
விழி பிதுங்கி நுரைசிதற
அசை போட்டவண்ணம்
அண்டை மாநிலத்திற்கு
லாரியில் அடிமாடாய்ப்போகிறது
விற்று காசக்கிவந்த
எங்கள்வீட்டு லட்சுமி
Tuesday, June 8, 2010
காற்றின் திசையில்
சிற்றோடை
சிற்றோடையின் மீது சிறுஇலை
இலைப்படகின்மீது கட்டெறும்பு
கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு
சின்ஞ்சிறு பாரத்தோடும்
மெலிதானத் துடிப்போடும்
காற்றின் திசையில்
நகர்ந்தபடி இருக்கின்றது
அதன் பெருவாழ்வு
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
Saturday, June 5, 2010
சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல் எடுத்துவைக்கிறது
வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன் பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது
பிஞ்சின் நடை பதற்றம் கண்டு
தாயன்பு தவிக்கிறது
சின்னக்குழந்தை
சிரித்தபடி நடக்கின்றது
சங்கீதத்தின் மீது
உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியானகவிதை
Subscribe to:
Posts (Atom)