Friday, September 30, 2011

பறவையின் இறகு






வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
67 -ம் பக்கஎண் அடையாளமாக
ஒரு பறவையின் இறகை
செருகி இருந்தேன்.

மீண்டும் வாசிக்கஎடுத்தபோது
83  -ம்பக்கத்தில்
பறவையின் இறகு இருந்தது.

இப்பொழுது
பறவையின் இறகை 
கையில்வைத்துக்கொண்டு
கற்க ஆரம்பித்திருக்கிறேன்
67 -ம் பக்கத்தில் இருந்து
83  -ம் பக்கத்திற்கு
எப்படி பறப்பதென்று?

Thursday, September 15, 2011

சிறு சிறு கவிதைகள்






.சிறகுகள் உதிர்ந்த ஈசல்கள்
மறுபடியும்
புழு பருவத்தை எய்தி
மறிக்கின்றன.



.ஒரு பூவை ரசித்து கொண்டிருக்கும் போது
சிலபட்டாம் பூச்சிகள்

 நம்மை கடந்து போய் விடுகின்றன.


.கனவென்பது 
நினைவுப்புகைப்படங்களைக்கழுவி
இரவில் காண்பது.





.அவிழ்க்க தெரிந்தகைகளுக்கு 
ஆராதிக்கத் தெரிவதில்லை.

Wednesday, September 14, 2011

காலி பாட்டில் தளம்








காலி பாட்டில் தளத்திலிருந்து
புறப்படுகிறது ராக்கெட்

வீர்ரென்று உறுமும் வண்டின் சத்தம் ...
கருத்த இருளில்
ஒற்றைச்சுடர்
மேல் எழும்பி அந்தரத்தில்
பல வண்ணப்பூச்சரங்களை
தூவி மறைகின்றது

மனைவியும் ,மகளும்
அண்ணாந்து ரசிக்க
அவர்களது விழிகளில்
மின்னி மின்னி மறைகின்றன
குதூகல மின்னல்கள் .

யாருமற்ற வீட்டில்
சுதந்திர தின சிறப்பு கொண்டாட்டத்தில்
நிரம்பியிருந்த அதே பாட்டில் மதுவை
அருந்திப்புறப் பட்டு
பூமியையும்,வானத்தையும்
பறந்து அளந்த
  தினத்தைநினைந்து
 குறு நகை புரிகின்றான் கணவன்.

Thursday, September 8, 2011

வாசிக்கஇயலாதவர்களுக்கு







இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ் செய்திகளை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

 பின்னொரு நாளில்
அவர்கள்அச்செய்தியை
வாசிக்கநேரும் தருணம்
மீண்டும் அவன்
 இறக்க வேண்டியிருந்ததது.  

தீயின் தரிசனம்






சருகுப் புதரிடை   
மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி   
நெருப்பைக் கடைகிறான்.
   
அம்மா தயிர் கடைகிற   
அதே பாவனையோடு
.   
டிஸ்கவரி சேனலில்  
நான் கண்ட காட்சி
  
வேகவேகமாக
கடையக் கடைய  
சட்டென்று புகை அவிழ்கிறது   
  
நெருப்புக் கங்குடன் புகையும்   
அக் கூட்டை கைகளில்
ஏந்தி எடுக்கிறான்
  
அக்னி குஞ்சொன்றை  
அன்று தான் கண்டேன்.  

Tuesday, September 6, 2011

அழுகை






       மூடப்பட்ட ரகசிய அறை
       தொலைந்து விட்டசாவி
       யாருக்கும் தெரியாது
       உடைக்க ஆரம்பித்ததில்
       பயங்கர சத்தம.