Thursday, February 17, 2011

முற்றுபுள்ளியால் கூட



நகங்களைப் போலவே
வளருகின்றன


சில சந்திப்புகள்,
சில பழக்கங்கள்,
சில வழக்கங்கள்,
சில இயலாமைகள்,
சில நிர்பந்தங்கள்,
சில கள்ளத்தனங்கள்,
சில துரோகங்கள்,

நேற்றோடுமுடித்துக்கொள்ளலாமென்று
இருந்த ஒன்று

புதிதாய் இன்னொன்றைதொடங்கிவைக்கிறது இன்று.

( முற்றுபுள்ளியால் கூடமுடிவதில்லை
எதையும் நிறுத்த-நகுலனின் கவிதை வரிகள்)   

Saturday, February 12, 2011

கடக்க முடியாதகணங்கள்








கதவு திறந்து
கடந்த கணத்தில்
பதறிச் சாந்தமடைகின்றன
கண்ணாடித்தொட்டிமீன்கள்.

நின்று விடுகிறது
நனைந்து கொண்டிருந்த
குளியலறை பாடல் ஒன்று

சட்டென பிரிகின்றன
முத்தங்ககொள்ளும்
இரு ஜோடி உதடுகள்.

காண நேர்ந்துவிடுகிற அக்கணம்
படபடக்கிறது

மேலும்
கடக்க முடியாதகணங்களாகி விடுகின்றன.

இம்மாதஉயிர்எழுத்து இதழில்வெளியான எனதுகவிதை

Thursday, February 10, 2011

மிருக தேவதை








கலைந்த கூந்தலில் விரிந்தமலர்
விரிந்தமலரின் வாடை
கிளர்த்தியிழுக்கிறது.

வாசிக்கும் செவ்விதழ்
செவ்விதழ் சிறு முறுவலிப்பு
ஆளை  உலுக்குகிறது.

எவ்வித பரபரப்புமின்றி
எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று
பரிகசிக்கும் பாவனைகள்.

இரை அசைகிற போது
அதன் ஊடே அசைகிறது
இரை பதுங்கிற  போது
அதன் ஊடே உறைகிறது.

பசித்த மிருகத்தின்
இரு ஜோடிக்கண்கள்.

(பிப்ரவரி உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை ஒன்று )

Thursday, February 3, 2011

சிறு கவிதைகள்






1    உதடுகள்
முத்தங்களை கடத்தும்
 மின் கம்பிகள்.

2    பதுங்கிச்செல்ல
வேண்டியிருக்கிறது
நண்பர்கள் வசிக்கிற
தெருவில் கூட.

 3   சமாதானம் ஏற்ப்பட்ட பிறகும்
ஏற்க முடிவதில்லை
அவர்களின் பிரியங்களை
அப்படியே.  

Wednesday, February 2, 2011

புன்னகை தயாரிப்பு






புன்னகையைத் தயாரிப்ப்து
எளிதாய்ப்படவில்லை எனக்கு.

பிறந்த குழந்தையை
என் கைத்தொட்டிலில் இட்டவுடன்

இருக்கமாய் இருந்த
என் முகத்திற்கு
அவசர , அவசரமாய்
ஒரு புன்னகையைப் பொருத்துவதில்
ஈடுபட்டுத் தோற்றேன்.

பெயரிடப்படாத
அக் குழந்தைக்கு
அழுகையே மொழியாய்   இருந்தது

சூசகமாய் அழுகை நிறுத்த

நிக்கோடின் புற்றாய் வளர்ந்த
உதட்டைக்குவித்து
ஒரு முத்தம் மட்டுமே
இட முடிந்தது என்னால்

Tuesday, February 1, 2011

விடுதியறை இரவு








நான்கு பக்கங்களிலும்
புணர்வை எதிர்நோக்கி
விழித்திருக்கும்
ஓட்டைகள்.

பாத்ரூம் கண்ணாடியில்
பெண்கள் விட்டுப்போன
ஸ்டிக்கர்ப்பொட்டுகள்.

இரண்டு படுக்கையுடன்
கூடிய அறையில்
நான் மட்டும் தனியாய்
ஒரு படுக்கையில்.

இன்னொரு படுக்கையில்
படுத்திருந்தது
என் காமம்.