• உயிரோசையில் வெளிவந்த கவிதையை இங்கு
பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி
ஒரு இலை கூட அசையவில்லை
மரம் உறங்குகிறது
ஒரு இறகு கூட விரியவில்லை
பறவை உறங்குகிறது
இழுபட்ட கவணின்பின்னே
விழிகள் மட்டும் விழித்து கொண்டிருந்தது
*
பிஞ்சுக் கன்னத்தில்
பதிந்த விரல்கள்
விம்முகிற குழந்தையிடம்
கேட்டுக் கொண்டிருந்தேன்
எப்போதும் பெற முடியாத மன்னிப்பை
*
கட்டைவிரல்
ஆள்காட்டிவிரல்
சுண்டுவிரல் என்று
சொல்லிக்கொண்டு வந்தவள்
மோதிரவிரலை மட்டும்
அடகு விரலென்றாள்.
*
இறந்த கட்டெறும்பை
இரைக்கு இழுத்துசெல்லும்
சிற்றெறும்புகளுக்குத்
தெரியவில்லை
தன் மூதாதையர்களைப் பற்றி
*
வீடற்றவனின்
மனைவி மட்டும்
விளித்துக்கொண்டிருந்தாள்
எங்க வீட்டுக்காரரென்று
1 comment:
நன்றி அருட் புதல்வன்
Post a Comment